சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா? இல்லையா? பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா பாதிப்பு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து முதல்வர் பேசுகையில், கரோனா பரிசோதனையில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 24.7 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 73% ஆக உள்ளது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் தளர்வுகள் அறிவிப்பது, பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.