சென்னை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக அமைப்புச் செயலாளருக்கு ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆர்.எஸ். பாரதி ஆஜரானார்.
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கருத்தரம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, இன்று பிற்பகலில், ஆர்.எஸ். பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான ஒரு நபர் ஜாமீனிலும் ஆர்.எஸ். பாரதியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.