கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:
சென்னையில் கரோனா சிகிச்சைக்காக இதுவரை 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம். முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.
கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
ஒவ்வொரு நாளும் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது.
எனினும், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் உயிரிழந்த காரணம் குறித்து அறியவும் மருத்துவக்கல்வி இயக்குனரகம், சுகாதாரத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது' என்றார்.