சென்னை: கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல் தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை காலமானார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமாகி, இன்று காலை அவர் உயிரிழந்தார். மிகுந்த பாதுகாப்புடன் அவரது உடல் முழுவதுமாக மூடப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள மகாலட்சுமி தெருவில் இருக்கும் வீட்டுக்கு ஜெ. அன்பழகன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜெ. அன்பழகன் உடலுக்கு, நெருங்கிய உறவினர்களும், அப்பகுதியில் வாழும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பாதுகாப்பு உபகரண ஆடை அணிந்திருந்த நான்கு பேர் மட்டுமே, அவரது உடல் இருந்த சவப்பெட்டியை தொட அனுமதிக்கப்பட்டனர்.
கண்ணம்மாபேட்டையில் தயாராக இருந்த குழியில், அவரது உடல் மிகவும் பாதுகாப்பான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகே ஜெ. அன்பழகனின் உடலும் புதைக்கப்பட்டது.
நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஏராளமான திமுகவினர் கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர்.