அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட பகுதிகளில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், முதுமக்கள் தாழிகள், எழும்புகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு மேற்கொள்ளும் தொல்லியலாளர்கள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது,
இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.
நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின் பக்கம் 12 புள்ளிகள் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது. இது வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளது என்றனர்.