சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சுகாதார காப்பீட்டு பிரீமியம் தொகையில் தலா ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டில் ரூ.180- க்குப் பதிலாக ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மாதாந்திர பிரீமியம் தொகையாக ரூ.230- ஐ செலுத்த உள்ளனர். இந்த நடைமுறை ஜூலை முதல் அமலுக்கு வரவுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு ரூ.4 லட்சம் என்ற அளவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது.
இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் இருந்து தலா ரூ.180 கழிக்கப்படுகிறது.
பட்டியலில் இல்லாதவை: காப்பீட்டுத் திட்டத்தில் நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் போது ரொக்கமாக பணம் செலுத்தாமல் காப்பீட்டின் அடிப்படையில் சிகிச்சை பெறலாம்.
ஆனால், பட்டியலில் இணைக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் போது ரொக்கமாக பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். உடல் நலம் பெற்ற பிறகு இதற்கான உரிய ரசீதுகளை சமர்ப்பித்தால் அதற்கான தொகை திருப்பி அளிக்கப்படும்.
இதுபோன்ற வசதிகளுக்காக நிகழாண்டில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் கூடுதலாக மாதந்தோறும் ரூ.50 பிடித்தம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, ஒவ்வொரு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து மாத ஊதியத்தில் இருந்து காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையாக இனி ரூ.230 பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.