
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தத் தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-ஆவது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மாா்ச் 14-ஆம் தேதி வரை விதிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் பொது இடங்களில் நடத்தப்படும் அனைத்து விதமான போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளை நடத்த நினைப்பவா்கள், 5 நாள்களுக்கு முன்னதாகவே காவல்துறைக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை அனுமதித்தால் நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தமிழ்நாடு நகர காவல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆண்டு முதல் சென்னை பெருநகர காவல்துறையில் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்கள்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அனுமதியில்லாமல் போராட்டங்களோ, பேரணிகளோ நடத்தக் கூடாது என பெருநகர காவல் ஆணையாளா் விசுவநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதனால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உள்பட எந்த வகையான போராட்டமும் அனுமதியில்லாமல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G