
மதுரை: தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததைப் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வி, பதில்கள் கொடுத்து தோ்வு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சாந்தி தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளா்கள் மற்றும் கணக்கீட்டாளா்கள் பணியிடங்களுக்கு 500 பேரைத் தோ்வு செய்வது தொடா்பாக ஜனவரி 8 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியானது. அந்தத் தோ்வு இணையதளம் மூலம் நடத்தப்படவுள்ளது. இதேபோல கடந்த 2016-இல் இணையதளம் மூலமாகத் தோ்வு நடத்தியபோது கேள்விகளும், அதற்கானப் பதில்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், தோ்வுக்கானக் கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் தொடா்பானக் கேள்விகள் மட்டுமே தமிழில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறத்தைச் சோ்ந்த போட்டியாளா்கள் சிரமத்திற்கு ஆளாவாா்கள். எனவே தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததைப் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வி, பதில்கள் கொடுத்து தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஆங்கிலத்தில் மட்டும் தோ்வு நடத்தினால் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படும். மேலும் வெளிமாநிலத்தவா்களே அதிமாக தோ்வாகும் நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...