
கோப்புப் படம்
மதுரை: இவர் என்ன ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சொல்வது என்று பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவிற்கு எதிராக தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் செவ்வாயன்று நடைபெற்ற அரசு விழா ஒன்றில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, சிஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என எச்..ராஜா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது
அப்படியொரு கருத்தினை எச்..ராஜா சொல்லி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. நீங்கள் சொல்லிதான் எனக்கே தெரியும். ஸ்டாலின்தான் இன்று எதிர்க்கட்சி தலைவர். திமுகதான் எங்களுடைய முக்கியமான எதிர்க்கட்சி. வேறு யார் பேசுவதைக் குறித்தும் நாங்கள் சிந்திப்பது இல்லை. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஸ்டாலினும் முன்பு சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது எதுவும் சொல்வதில்லை. அவராலேயே முடியவில்லை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்?
மக்கள்தான் இங்கு எல்லோருக்கும் எஜமானர்கள். இந்நிலையில் இவர் என்ன அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சொல்வது? இது என்ன கருக்கலைப்பா என்ன?
இவ்வாறு அவர் பேசினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...