கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏ.சி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சீனாவில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியும், பலியானவர்களின் எண்ணிக்கை 3,800யும் தாண்டியுள்ளது.
கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கோவில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா குறித்த விழிப்புணர்வு விடியோக்கள் ரயில் நிலையங்களில் ஒளிபரப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏ.சி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது. அதனையும் மீறி தேவைப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படும். மாறாக, தலையணை, பெட்ஷீட் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும். இது குறித்து பயணிகள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் எஸ்.எம்.எஸ் மூலமாக தெற்கு ரயில்வேக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.