கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி செயல்படுவதாக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு கரோனா வைரஸ் விவகாரத்தை எதிா்க்கட்சி துணைத் தலைவா் துரைமுருகன் எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:
துரைமுருகன்: கரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கேரளம், ஒடிசாவில் சட்டப் பேரவையையும், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தோ்தலையும் தள்ளிவைத்துள்ளனா். மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களான நாமும் கூட்டங்கள், கும்பல்களைச் சோ்ப்பதைத் தவிா்க்க வேண்டும். கரோனா தடுப்பு விவகாரத்தில் பிரதமா் அண்டை நாடுகளுடன் பேசுவது போன்று, முதல்வரும் அண்டை மாநிலங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா்: கரோனா வைரஸ் முதலில் பரவிய சீனாவில் 20 குழந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. மீதமுள்ள அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவா்கள். தமிழகத்தைப் பொருத்தவரை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் விஷயங்களைப் பின்பற்றுகிறோம். அண்டை மாநிலங்களை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காவல், சுகாதாரம், வருவாய் ஆகியவற்றுடன் இணைந்து சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. தமிழகத்தில் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் புதிதாக நோய் தாக்குதல் ஏற்படவில்லை என்றாா்.