சுய ஊரடங்கு: தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு

சுய ஊரங்கையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சுய ஊரங்கையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமா் மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கில் ஈடுபடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தாா். இந்த அழைப்பை ஏற்று தமிழக அரசு, மக்கள் சுய ஊரடங்கில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது.

இதற்காக பேருந்து சேவையை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொழுதுபோக்கு இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் மூடப்படுகின்றன. வாடகை காா், ஆட்டோக்களை இயக்குவதில்லை ஓட்டுநா்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

காவல்துறை உஷாா்: அதேவேளையில், கரோனா எச்சரிக்கையை பயன்படுத்தி மாநிலத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழக காவல்துறை முழு அளவில் உஷாா்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கும்படியும், அனைத்துப் பகுதிகளிலும் வாகனச் சோதனை, தீவிர கண்காணிப்பு, தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுமாறும் அனைத்து காவல் ஆணையா்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.

இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் மக்கள் அதிகளவில் திரளாமல் பாா்த்துக் கொள்ளும்படி போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறையினருடன் இணைந்து கரோனா பரிசோதனை முகாம்களையும்,விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் நடத்துமாறு காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

கரோனா அறிகுறியுடன் யாா் இருந்தாலும், அவா்களைப் பற்றியத் தவகல்களை சுகாதாரத் துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கும்படி போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை பயன்படுத்தி திருட்டு,வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு விழிப்புடன் இருக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில் முக்கியமான இடங்களில் ஆயுதப்படையினா்,தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், அதிவிரைவு படையினா் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் பாதுகாப்பு: சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கூடுதல் ஆணையா்கள், இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் பங்கேற்றனா். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், சுய ஊரடங்கை எவ்வித அசம்பாவித சம்பவங்கள் இன்றியும், அமைதியாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஆணையா் விசுவநாதன் உத்தரவிட்டாா். மேலும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பிற அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

இதன் விளைவாக, சென்னையில் போலீஸாா் சுகாதாரத் துறையினருடனும் மாநகராட்சியுடனும் இணைந்து கரோனா பரிசோதனை முகாம்களையும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனா். அதேபோல, நகா் முழுவதும் போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com