திருமலையில் வியாழக்கிழமை முதல் ஸ்ரீசீனிவாச சாந்தி உத்ஸவ சஹீத தன்வந்திரி மகா யாகம் தொடங்கப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உலகத்தைக் காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரமான தன்வந்திரிக்கு மகா யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. உலக நன்மைக்காக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தி தன்வந்திரியை ஆயுர்வேத மருத்துவர் என்று புராணங்கள் கூறுகிறது. அவரை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர்.
எனவே, தேவஸ்தானம் கரோனா பாதிப்பிலிருந்து நாடு முழுவதும் விட திருமலையில் உள்ள தர்மகிரி வேதபாடசாலையில் தன்வந்திரி யாகத்தை வியாழக்கிழமை காலை முதல் தொடங்கியது. தென்னிந்தியாவிலிருந்து வந்த வேத விற்பன்னர்கள் இந்த யாகத்தை மிகவும் சிரத்தையாக நடத்தி வருகின்றனர்.
இதில் குறைவான எண்ணிக்கையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரும் 28ம் தேதி காலை மகாபூர்ணாஹூதியுடன் தன்வந்திரியாகம் நிறைவு பெற உள்ளது.