போடியில், வெள்ளிக்கிழமை, இலங்கையிலிருந்து போடிக்கு வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் சாலையில் ஓடிச் சென்று மூதாட்டியின் கழுத்தை கடித்ததில் மூதாட்டி காயமடைந்தார். பின்னர் மயங்கிய இளைஞரும், மூதாட்டியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் மகன் மணிகண்டன் (34). இவர் இலங்கைக்கு ஜவுளி வியாபாரம் சென்றவர் மார்ச் 21 ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். வெளிநாட்டிலிருந்து வந்ததால் இவர் சுகாதாரத் துறையினரால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தார். தனிமைப்படுத்தப்பட்டதற்கான குறியீடுகளும் இடப்பட்டுள்ளது.
இவருக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் திடீரென வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார். அருகில் உள்ள பக்தசேவா தெருவிற்குள் ஓடிய அவர் வீட்டின் முன் படுத்திருந்த நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தை கடித்துள்ளார்.
மூதாட்டியின் அலறலை கேட்ட பொதுமக்கள் இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்று முடியாததால் அவரை கைகளால் தாக்கி மீட்டுள்ளனர். இளைஞர் கடித்ததில் மூதாட்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பொதுமக்கள் மணிகண்டனை பிடித்து வைத்துவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் மணிகண்டனைமீட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதால் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போடி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.