கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவது போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதமசிகாமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர் , செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதிய உயர்வைப் போலவே இரவு பகல் பாராமல் உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குக் கூட பணி நிரந்தரம் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே இவர்களுக்கு பணி நிரந்தரமும் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களான முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், கையுறைகள் ஆகியவைகளை 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எனவே வாகனங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வீட்டில் உள்ளவர்கள் இந்த நோயின் அபாயத்தை உணர்ந்து வேலைக்குச் செல்லாதீர்கள் என வர்புறுத்தியும் அவர்கள் சமுதாயக் கடமைகளை உணர்ந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு நோயாளிகளை மருத்துவர்களிடம், மருத்துவமனைக்கும் உடனடியாக அழைத்துச் செல்லும் உன்னதமான பணியை உடனடியாக செய்துவரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின்ப் வாழ்வாதாரத்தை காப்பாற்றும்படி இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.