கரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
திருமணம் போன்ற சுப காரியங்கள் ஒரு சில இடங்களில் ரத்து செய்யப்பட்டாலும் ஒரு சில இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை உடன் எளிமையான முறையில் நடந்து வருகிறது.
அதன்படி, இன்று ஈரோடு குமரன் குட்டையில் பொன் சங்கர் என்பவருக்கும் அதே பகுதியை ராகவி என்பவருக்கும் பெரியோர்களால் பேசி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா வைரஸ் எதிரொலியாக இவர்களது திருமணம் இன்று காலை எளிய முறையில் நடந்தது.
ஒரு சில உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் கையில் சோப்பைப் போட்டுக் கழுவிக் கொண்டு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மணமகளும் மணமகனும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர். பின்னர் முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.