கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதையடுத்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 1071 பாதிக்கப்பட்ட நிலையில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
100 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள்விடுந்திருந்தன. இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதன்படி பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் ஆளுநர் நிதியுதவி வழங்கியுள்ளார்.