

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவருக்கு திங்கள்கிழமை தாராபிஷேகம் நடத்தப்பட்டது.
கோடைக் காலங்களில் அருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சன்னதியில் புழுக்கத்துடன் அனல் காற்றும் வீசும். எனவே, அருணாசலேஸ்வரரை குளிர்விக்க அக்னி நட்சத்திரம் தொடங்கி, முடியும் வரை தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
தாராபிஷேகம் தொடங்கியது: திங்கள்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், அருணாசலேஸ்வரர் கோயில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்பட்டது.
காலை 10 மணிக்கு மூலவருக்கு மேலே ஒரு பாத்திரத்தில் மூலிகைகள், வெட்டி வேர், கற்பூரம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்கள் போடப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்தத் தண்ணீர் பாத்திரத்தின் அடிப்பாகம் வழியாக சொட்டு, சொட்டாக மூலவர் மீது விழுந்தபடியே இருந்தது. இதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து அருணாசலேஸ்வரரை குளிர்விக்கலாம் என்பது ஐதீகம்.
மே 28-ம் தேதி வரை தொடரும்: தாராபிஷேகம் தொடர்ந்து மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஊரடங்கு காரணமாக, தாராபிஷேகத்தில் கோயில் சிவாச்சாரியர்கள், ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சித்ரா பௌர்ணமி கிரிவலத்துக்குத் தடை: சித்திரை மாதப் பௌர்ணமியான புதன், வியாழக்கிழமைகளில் (மே 6, 7), திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கரோனா தீநுண்மி தொற்றைத் தடுக்க, மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இதேபோல, 14 கி.மீ. கிரிவலப் பாதையில் கிரிவலம் வரவும் அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.