டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. வெல்லும்தமிழகம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.