தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
இதன்படி தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரத்தில் தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 364 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 3 பேர் பலியானதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், இதுவரை மொத்தம் 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் புள்ளி விவரத்துடன் விளக்கினார்.