நாமக்கல்லில் காஸ் நிரப்பிய ஆம்னி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஆம்னி வாகனத்தில் ஜவுளிகளைக் கிராமப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவார். கரோனா பொது முடக்கத்தால் கடந்த இரு மாதங்களாக ஜவுளி விற்பனைக்குச் செல்லவில்லை. மேலும், ஆம்னி வாகனத்தையும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சரிசெய்து வைத்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மோகனூரில் இருந்து ராசிபுரம் நோக்கிச் சென்ற சரவணகுமார், நாமக்கல் முதலைப்பட்டிபுதூரில் செல்வம் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனியார் ஆட்டோ காஸ் நிரப்பும் பங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வாகனத்திற்கு காஸ் நிரப்பினார். தொடர்ந்து சிறிது தூரம் வந்த நிலையில் வாகனம் நின்றது. மீண்டும் இயக்க முயற்சித்தபோது திடீரென புகை கிளம்பி ஆம்னி வாகனம் தீப்பற்றத் தொடங்கியது.
அதிர்ஷ்டவசமாக சரவணகுமார் வாகனத்திலிருந்து இறங்கி விட்டார். மளமளவெனத் தீப்பற்றத் தொடங்கியதால், காஸ் நிரப்பும் பங்கில் உள்ள ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் ஆம்னி வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.