தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் அவசரகதியில் புதிதாக கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கி 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கம்பம் அரசு மருத்துவமனையில் திடீரென புதிதாக கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கி, சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முறையே 7 மற்றும் 3 வயதுடைய 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளுடன், கரோனா தொற்று இல்லாத தாயாரும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
போதிய முன்னேற்பாடு மற்றும் வசதிகள் இல்லாமல், பிரசவ வார்டு, பிரேதப் பரிசோதனை அறை அருகே புதிதாக கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கியுள்ளதால் மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கரோனா சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வரும் நிலையில், கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கி, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சையிலிருந்தவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்னரசனிடம் கேட்டதற்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 குழந்தைகளை இங்கு அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.