பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் 150 இடங்களில் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடவேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்(சிஐடியூ) தங்கவேல் தலைமை வகித்தார். இதில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், எல்பிஎஃப் மாவட்ட பொதுச் செயலாளர் சிதம்பரசாமி, துணைத்தலைவர் பூபதி, ஐஎன்டியூசி சார்பில் சிவசாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளளர் முத்துசாமி, எம்எல்எஃப் சார்பில் ராமசாமி, சிவபாலன், சிஐடியூ சார்பில் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வடக்கு வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நலவாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம், தாராபுரம், ஊத்துக்குளி, அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.