புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று “டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்” என்ற பெயரில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்ப்படும் என்று புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி அவர்கள் சட்டப்பேரவையில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (15-11-2020), காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா”, புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் செயலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் புதுச்சேரி, புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழக அமைப்பாளர்களான இரா.சிவா, எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோரும் மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.