தஞ்சாவூரில் பொதுப் பணித்துறைத் தலைமைப் பொறியாளர் வீட்டில் 40 சவரன் நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பொதுப் பணித் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது வீடு தஞ்சாவூர் யாகப்பா நகர் அருகே பரிசுத்தம் நகரில் உள்ளது. தற்போது ராமமூர்த்தி குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருவதால், தஞ்சாவூரிலுள்ள வீட்டுக்குக் காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காகக் காவலாளியும் விடுப்பில் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டின் முன் பக்கக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 2 கேமராக்களையும் மர்ம நபர்கள் கழற்றி சென்றுள்ளனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.