கோவையில் நவ. 22ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி

நவம்பர் 22 ஆம் தேதி கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி, சோமனூர் முக்கிய சாலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
கோவையில் நவ. 22ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி
கோவையில் நவ. 22ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி

நவம்பர் 22 ஆம் தேதி கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி, சோமனூர் முக்கிய சாலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.30 மணியளவில் நிறைவாக ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எஸ். அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது. 

விளைபொருட்களை விற்று வந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, பெரு நிறுவனங்களின் ஆதிக்க சந்தைக்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை பெரு நிறுவனங்களே முடிவு செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து  ராகுல்காந்தி வழிகாட்டுதலின்படி, பலகட்ட போராட்டங்களைத் தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக போராட்டம் நடத்தியது. 

விவசாய விரோதச் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறுகிற வரை தொடர்ந்து போராடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. வருகிற நவம்பர் 22 ஆம் தேதி கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி, சோமனூர் முக்கிய சாலையில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.30 மணியளவில் நிறைவாக ஏர் கலப்பை பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் - முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் முன்னோடிகளுடன் நானும் பங்கேற்க இருக்கிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிற அளவில் கோவையில் நடைபெறும் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாட்டிலும், ஏர் கலப்பைப் பேரணியிலும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள். 

இதையொட்டி நவம்பர் 28 ஆம் தேதி மாவட்டக் காங்கிரஸ் சார்பில் தங்கள் பகுதிக்கு உள்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணி நடைபெற இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியில் நான் பங்கேற்க இருக்கிறேன். அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு சேலத்திலும், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஈரோட்டிலும், சு. திருநாவுக்கரசர், எம்.பி., திருச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்குள்ளாக தங்கள் மாவட்டக் காங்கிரஸ் எல்லைக்குள்பட்ட எஞ்சியுள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏர் கலப்பைப் பேரணி தொடர்ந்து நடைபெற உள்ளது என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com