சத்தியமங்கலம் வட்டாரத்தில் வாழைத் தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் வாழை சாகுபடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நேந்திரம், ஜி9, தேன்வாழை, மொந்தன், ரஸ்தாளி, பூவன் மற்றும் செவ்வாழைத்தேன் ரக வாழை அறுவடை செய்து விற்பனைக்குத் தாயரான நிலையில் அதன் விலை சரிந்துள்ளது.
கேரளத்தில் குளிர் காலம் மற்றும் மழைக் காலம் என்பதால் வாழைப்பழம் வாங்க மக்கள் விரும்புவதில்லை. இதனால் வாழைத் தார்கள் வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாத காரணத்தால் மரங்களிலேயே பழுத்து வீணாகிறது.
கடந்த மாதம் கிலோ ரூ.40 க்கும் விற்பனையான நேந்திரம் தற்போது கிலோ ரூ.12 ஆக குறைந்தது. தேன்வாழை, ஜி9 வாழைத் தார்கள் உற்பத்தி செய்ய ரூ.100 செலவாகும் நிலையில் அதன் விலை ரூ.45 ஆக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சென்ற வாரம் விற்பனையான வாழைகள் ஞாயிற்றுக்கிழமை நிலரவரப்படி பாதியாகக் குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் வாழைகளை இருப்பு வைத்து விற்பதற்கு குளிர்பதனக் கிடங்கு அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.