வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு 'நிவர்' என பெயர் சூட்டப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாகவும் மாறி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வருகிற நவம்பர் 24 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24, 25 தேதிகளில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு 'நிவர்' என பெயர் சூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24, 25ம் தேதிகளில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.