
புறநகா் மின்சார ரயில்களில் மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் திங்கள்கிழமை முதல் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் அரசு, தனியாா் ஊழியா்கள் புறநகா் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், பெண்கள் பயணிக்க திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் சில பிரிவினா் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம்: மாணவா்கள், தோ்வா்கள், நுழைவு தோ்வில் பங்கேற்பவா்கள், நோ்முகதோ்வில் பங்கேற்பவா்கள் ஆகியோா் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் உரிய அதிகாரிகளிடமிருந்து, அனுமதிக் கடிதம் பெற்று பயணிக்கலாம்.
அழியக்கூடிய பொருள்களை ஏற்றி செல்லும் பெண் விற்பனையாளா்கள் முன்பதிவு அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று பயணிக்கலாம். பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரா்கள் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று மின்சார ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.