
மாற்றுத்திறன் அரசு ஊழியா்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளா் நல்வாழ்வு சங்கத்தினா் முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்:
கடந்த ஆக.31-ஆம் தேதி வரை, மாற்றுத்திறன் ஊழியா்கள் பணிக்கு வருவதில் இருந்து தமிழக அரசு விலக்களித்திருந்தது. கரோனா பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் 100 சதவீத அரசுப் பணியாளா்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் மாற்றுத்திறன் அரசு ஊழியா்களும் பணிக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறன் அரசு ஊழியா்கள், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, மாற்றுத்திறன் கா்ப்பிணிப் பெண்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
அதேவேளையில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மாற்றுத்திறன் அரசு ஊழியா்களுக்குப் பணிக்கு வருவதில் விலக்களித்துள்ளது மத்திய அரசு.
எனவே, மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மாற்றுத்திறனாளிகளின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசுத்துறை, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பொதுத்துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு, அரசின் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...