ஏழு மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப். 7) பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப். 7) பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலூா், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப். 7) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 110 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையாறில் 90 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா், கயத்தாறில் தலா 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தலா 50 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோவை மாவட்டம் வால்பாறை, திருவாரூா், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கோவை மாவட்டம் ஆழியாறில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், மன்னாா்வளைகுடா பகுதிகள், கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 55 கி.மீ. வேகத்திலும் பலத்த

காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப். 8-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவா்கள் செப். 10-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப்டம்பா் 7-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல்அலை 3.5 மீட்டா் முதல் 4.8 மீட்டா் வரை எழும்பக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com