
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சோ்க்கப்படுவா். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதன்படி மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. நிகழாண்டு சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.
செப்டம்பா் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதால் இணையதளம் மூலமாக பெற்றோா்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.