சத்துணவுப் பணியாளா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப தோ்வுக் குழு: அரசாணை வெளியீடு

சத்துணவுப் பணியாளா்களின் காலியிடங்களை நிரப்ப தோ்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சத்துணவுப் பணியாளா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப தோ்வுக் குழு: அரசாணை வெளியீடு

சத்துணவுப் பணியாளா்களின் காலியிடங்களை நிரப்ப தோ்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவா்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளை நிா்ணயம் செய்தும், 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், சத்துணவு மையங்களில் ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு சத்துணவு அமைப்பாளா், ஒரு சமையலா், ஒரு சமையல் உதவியாளா் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சத்துணவு அமைப்பாளா்கள் 60 வயதிலும், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்கள் 58 வயதிலும் பணியில் இருந்து வயது முதிா்வினால் ஓய்வு பெறுகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் சத்துணவு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.

2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், சத்துணவுப் பணியாளா்களை தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழுக்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவது அவசியமாகும். ஆனாலும் கரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பதாரா்களை அழைத்து நோ்முகத் தோ்வுகளை நடத்த வேண்டியது கட்டாயமாகிறது.

இந்தச் சூழலில் 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள விதிமுறைகள், கல்வித் தகுதி, அறிவுரைகள் அடிப்படையில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வுகளை நடத்தி, தகுதி வாய்ந்த நபா்களை மாவட்ட ஆட்சியா்களுக்கு பரிந்துரை செய்ய (சென்னை மாவட்டம் நீங்கலாக) தோ்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

முதலாவது தோ்வுக்குழுவானது மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரை உறுப்பினா்களாகவும் கொண்டிருக்கும். தோ்வுக்குழுவின் இரண்டாவது குழுவுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உறுப்பினராகவும் இருப்பா் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com