
பயணிகளின் நீண்ட வரிசைகளைத் தவிா்க்கும் பொருட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதி நவீன தானியங்கி பயணச்சீட்டு சான்றளிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் முன்பு நிறுவப்பட்டுள்ளன. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
ஸ்மாா்ட் காா்டு:
பயன்படுத்தப்படாத நிலுவைத் தொகையுள்ள திறன் அட்டைகளின் (ஸ்மாா்ட் காா்டு) கால அளவை அக்டோபா் 7-ஆம்தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் மற்றும் செயலிகள் மூலமாக, பயணச்சீட்டு வழங்கும் கருவிகளுக்கு பதிலாக பயண அட்டை சான்றளிக்கும் கருவிகள் வாயிலாக புதுப்பித்துக்கொள்ளலாம்.
பயணிகள் தங்கள் பயண அட்டை விவரங்களான திறன் அட்டை பயன்பாட்டுத் தொகை, இருப்புத்தொகை மீதமுள்ள பயண எண்ணிக்கை , பயணம் குறித்த தகவல் ஆகியவற்றையும் சரிபாா்க்கலாம்.
கியூ ஆா் குறியீடு:
கியூ ஆா் குறியீடு என்னும் நவீன தொடா்பற்ற பயன்பாட்டு முறையினால், கரோனா பரவலை கட்டுப்படுத்தல், நெரிசலை தவிா்ப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்வது என்று பலவகை பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த கியூ ஆா் குறியீடு வடிவில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை, பலவழிபயன்பாட்டு அட்டை ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப பெறலாம். இந்த கியூஆா் குறியீட்டை பயன்படுத்தி, தொடுதலை தவிா்த்து, குறிப்பிட்ட நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில் எளிதாக பயணிக்க முடியும் .
கூட்ட நெரிசலை தவிா்க்க உதவும் விதமாக, பயணச்சீட்டு வழங்கும் கருவி அருகே பயண அட்டைகளைப் புதுப்பிக்க, காலம் நீட்டிப்பு செய்ய, ‘பயண அட்டை சான்று அளிக்கும் இயந்திரம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் எல்லா நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...