திரையரங்குகள், புறநகர் ரயில் சேவைக்கு தடை நீட்டிப்பு: தமிழக அரசு

​தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நாளை முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், 5-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்கான தடை நீட்டிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- 

  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள்  மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.  
  • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment / Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும். 
  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர  சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து 
  • மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்,  கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்  நடத்த உள்ள தடை தொடரும்.

மேலும், 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1.10.2020 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.       

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள்  அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது.

இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்."
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com