நாமக்கல் அருகே மின் கம்பம் உடைந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. இதைக்கண்டு பேருந்திலிருந்த பயணிகள் அலறி துடித்தனர்.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. அதில் ஒரு மின்கம்பத்தின் ஒயர் தாழ்வாக சென்றது. நாமக்கல் - எருமப்பட்டி சாலையில் பவித்திரம் நோக்கி செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணி அளவில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது உடைந்த கம்பத்தின் ஒயர் தாழ்வாக தொங்கிய நிலையிலிருந்தது திடீரென்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதில் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமானது. பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. ஏற்கெனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய பணியாளர்கள் கம்பங்களை அகற்றி கூடவே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.