சிவகங்கை: சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி(45). இவர் தனது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(68), ராஜா(52) உள்பட 11 பேருடன் மதுரையிலிருந்து காரில் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளனர்.
காளையார்கோயில் உழவூரணி அருகே சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அல்லிராணி, ஆறுமுகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றவர்களை மீட்ட போலீஸார் காளையார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காளையார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.