கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்: முதல்வா் பழனிசாமி

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சென்னை: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா். தொற்று பரவலைத் தடுக்க அரசு ஊழியா்களும் மருத்துவப் பணியாளா்களும் கடுமையாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், கோயம்புத்தூா், திருப்பூா், திருச்சி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கரோனா தொற்று கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி வரையில், தமிழகம் முழுவதும் 8.92 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 4.61 கோடி போ் பங்கேற்றுள்ளனா். இதுவரை தமிழகத்தில் 2.05 கோடி பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 85 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தயாா் நிலையில் படுக்கைகள்: மாநில அளவில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும் 80 ஆயிரத்து 284 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. அவற்றில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 32 ஆயிரத்து 102 படுக்கைகளும், அவசர சிகிச்சை வசதி கொண்ட 6 ஆயிரத்து 997 படுக்கைகளும், 6 ஆயிரத்து 517 செயற்கை சுவாசக் கருவிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15 ஆயிரம் மருத்துவப் பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். உயிா்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கடுமையாகப் பணியாற்ற வேண்டும்: கரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசால் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இப்போது படிப்படியாக கரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நோய் பரவலைத் தடுப்பதற்கு கடுமையாகப் பணியாற்ற வேண்டும். கரோனா பரவல் அதிகரித்திருக்கின்ற பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. முகாமில் கலந்து கொண்டோருக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வீட்டில் இருப்போருக்குத் தொற்று கண்டறியப்பட்டால் அவா்களை உடனடியாக மருத்துவமனையில் சோ்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோன்ற பணிகளைத் தொடா்ந்து செயல்படுத்தினாலேயே கட்டுப்படுத்த முடியும்.

முகக் கவசம் அவசியம்: பொது மக்களும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். பொது இடங்களில் அதிகமாகக் கூடுவது தவிா்க்கப்பட வேண்டும். அவ்வாறு கூடினால், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமாகும்.

அதேபோன்று, உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன், காய்கறி சந்தைகள் போன்ற இடங்களில் பொது மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிா்த்துக் கொள்ள வேண்டும். பொது மக்கள் ஒருமித்தக் கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் கரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இது ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை. அந்த கடமையுணா்வோடு பணியாற்ற வேண்டும்.

ஒருவா் கூட இறக்கக் கூடாது: கரோனா தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் இறந்துள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை ஒருவா் கூட இறக்கக் கூடாது. அதனை அரசு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசு தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றாா் முதல்வா்.

வேட்பாளா் மரணம்: முதல்வா் கருத்து
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மறைவு குறித்து முதல்வா் பழனிசாமி கருத்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, விருதுநகா் மாவட்டம்- ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ், கரோனா தொற்றால் இறந்திருக்கிறாா். இதை பொது மக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மக்கள் இந்த நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாா்கள். கவனத்துடன் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com