தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மதுக்கடைகளின் செயல்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுக்கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. வரிசையில் நின்று வாங்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கடைப் பணியாளர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும்.
மதுக்கடையை நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 6 அடி சமூக இடைவெளியில் நிற்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்
மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.
ஒரேநேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை.
மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.