திருமணம், கோயில் திருவிழாக்களுக்கு 50 சதவீத பொதுமக்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக்கோரி மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்த திருமண அமைப்பாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து மேள, தாளங்கள், மைக்செட், வாழைமரம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
இதன் பிறகு மாநிலத் தலைவர் எஸ்.பழனிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.நாகேந்திரபிரபு ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்ற விசேஷங்களுக்கு எங்களது அமைப்பைச் சார்ந்தவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இதில், ஒளி-ஒலி அமைப்பாளர்கள், பந்தல் அமைப்பாளர்கள், மேடை அலங்காரம் செய்பவர்கள், பாத்திர வாடகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா பொது முடக்கம் காரணமாக எங்களது தொழில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்ற தொழில்களுக்கு வழங்கியுள்ளதைப் போல 50 சதவீத பொதுமக்களுடன் திருமணம், கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த மனு அளிப்பின்போது, மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ஜான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.