மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குள்ளேயே குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் வீர அழகர்.
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டது. கோயிலுக்குள்ளேயே குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் வீர அழகர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்வான ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ வீர அழகர் கோயிலுக்கு உள்ளேயே குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை கோயிலுக்கு உள்ளேயே எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அப்போது வீர அழகர் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் கரொனா கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்த நிகழ்ச்சி கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. வீர அழகர் குதிரை வாகனத்தில் மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அழகருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவத்தின்போது வைகை ஆற்றுக்குள் முடி காணிக்கை செலுத்தியும் குழந்தைகளுக்கு காது குத்து நடத்தியும் அழகருக்கு வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். இந்த ஆண்டு ஆற்றில் அழகர் இறங்காத நிலையிலும் இவர்கள் வழக்கம் மாறாமல் வீர அழகர் கோயிலுக்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றுக்குள் முடிகாணிக்கை செலுத்தியும் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அதன்பின்னர் கோயிலுக்கு முன் வாசலில் நின்று தேங்காய் பழத்துடன் சூடம் கொளுத்தி அழகரை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர்.