அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே சேதுராஜபுரம் அன்பு மாடல் நகரில் உள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில், பாபாவிற்கான வியாழக்கிழமை நன்னாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது தமிழக அரசு உத்தரவின்படி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வாரம் தோறும் வரும் வியாழக்கிழமைகளில் ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு வழக்கமான ஆரத்தி வழிபாடுகளைத் தவிர அவரது உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் வழிபாடுகளும், கோயில் வெளிப்பிரவாகத்தில் கிரிவலம் எனப்படும் பல்லக்கு பவனியும் நடைபெறுவது வாடிக்கை.
இதன்படி, சேதுராஜபுரம் அன்பு மாடல் நகரிலுள்ள ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு நண்பகல் ஆரத்தி நடைபெற்றது. அப்போது தமிழில் இசையுடன்கூடிய சிறப்பு பக்திப்பாடல்கள் கோயிலில் ஒலித்திட, ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கான பஞ்சதீப ஆரத்தி, ஏக தீப ஆரத்தி நடைபெற்றது. அதையடுத்து சிறப்பு அன்னப்பிரசாத நைவேத்தியமும் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீசீரடி சாய்பாபா முழுஅலங்காரத்தில் காட்சியளித்தார். அப்போது உலக நன்மை வேண்டி சங்கல்ப வழிபாடும் 3 நிமிட தியானமும் கோயில் பூசாரியார் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்றது.