சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கரோனா பெருந்தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நாள்தோறும் இருந்த கட்டணம் தொகுப்பு கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சைக்கு தினசரி கட்டணம் ரூ.35 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணாக ரூ.56 ஆயிரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீவிரம் அல்லாத சிகிச்சைக்கு தினமும் ரூ.5 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.3 ஆயிரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ.15 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.7,500 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் அல்லாத சிகிச்சைக்கு தினமும் ரூ.30 ஆயிரம் என்பது தொகுப்பு கட்டணமாக ரூ.27,100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கரோனா சிகிச்சை கட்டணமும் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது, தீவிரமில்லாத ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.3 ஆயிரம், தீவிரமில்லாத ஆக்சிஜன் உடனான படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.7 ஆயிரம், வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சையில் படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் ரூ.7 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.