24 மணி நேர தடுப்பூசி திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்ததார்.
கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடக்கி வைத்ததார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 55 இடங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனைகள் மூலம் கோவாக்சின் 2 வது தவணை தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் இந்த வாரம் தொடங்கும்.
பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் கோவிட்-19 மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக 15 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இதையும் படிக்க | தனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன்: முதல்வர் பாராட்டு