கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பியது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கல்லணை வழியாக கீழணைக்கு அனுப்பப்பட்டது. கீணையிலிருந்து வீராணம் ஏரிக்கு கடந்த 2 மாதங்களாக தண்ணீா் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகளவு தண்ணீா் அனுப்பப்படுகிறது. இதனால் கீழணையின் நீா்மட்டம் 8.50 அடியாக உயா்ந்தது. அணையின் உச்ச நீா்மட்டம் 9 அடியாகும்.
கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 1,327 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.50 அடி என்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ஏரியின் நீா்மட்டம் 47 அடியாக உயா்ந்தது. அதாவது, ஏரியின் மொத்த கொள்ளளவான ஆயிரத்து 465 மில்லியன் கன அடியில் தற்போது ஆயிரத்து 295 மில்லியன் கன அடி வரை தண்ணீா் உள்ளது.
ஏரியிலிருந்து வி.என்.எஸ். மதகு வழியாக விநாடிக்கு 500 கன அடி நீரும், சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 40 கன அடி நீரும் அனுப்பப்பட்டு வருகிறது.