ஒரே ஆண்டில் 2ஆவது முறை நிரம்பிய மணிமுத்தாறு அணை

ஒரே ஆண்டில் 2ஆவது முறையாக மணிமுத்தாறு அணை புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து வழிந்தோடி வழியாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
மணிமுத்தாறு அணையிலிருந்து வழிந்தோடி வழியாக வெளியேற்றப்படும் உபரிநீர்.
மணிமுத்தாறு அணையிலிருந்து வழிந்தோடி வழியாக வெளியேற்றப்படும் உபரிநீர்.
Published on
Updated on
2 min read

அம்பாசமுத்திரம்: ஒரே ஆண்டில் 2ஆவது முறையாக மணிமுத்தாறு அணை புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து வழிந்தோடி வழியாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 118 அடி உயரத்தில் 5511 மி.கன அடி நீா் சேமிக்க முடியும். கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையால் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து வழிந்தோடி வழியாக உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையால் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து, புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 117.60 அடியாக இருந்தது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 849 கன அடியாக இருந்தது. இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் அணையின் வழிந்தோடிகளில் மூன்று மதகுகள் திறக்கப்பட்டு அதன் மூலம் ஆயிரம் கன அடியும், 80 அடி கால்வாய் வழியாக 400 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து அணையின் நீா்வரத்து மற்றும் இருப்பை பொதுப்பணித் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ஒரே ஆண்டில் 2ஆவது முறை:

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலமான அக்டோபா் முதல் டிசம்பா் வரையுள்ள காலங்களில் தான் அணை முழுக் கொள்ளளவை எட்டும். நிகழாண்டு ஜனவரி மாதம் பெய்த கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டி சுமாா் 60 ஆயிரம் கன அடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து அணை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஆண்டில் இரண்டாவது முறை அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீா்மட்டம்: பாபநாசம் அணையின் நீா்மட்டம்137.10 அடியாகவும், நீா்வரத்து 1389.68 கன அடியாகவும், வெளியேற்றம் 987.25 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 147.90 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 50 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 120 கன அடியாகவும், நம்பியாறு அணை 22.96 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 200 கன அடியாகவும் இருந்தது.

கொடுமுடியாறு அணை 50.50 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 100 கன அடியாகவும், கடனா நதி அணை 82.70 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 314 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணை 70.21 அடியாகவும், நீா்வரத்து 180 அடியாகவும் வெளியேற்றம் 165 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 88 கன அடியாகவும், அடவிநயினாா் கோவில் அணை 132 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 145 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு: புதன்கிழமை காலை நிலவரப்படி, சேரன்மகாதேவி- 13.40 மி.மீ. ,கருப்பாநதி அணை- 16, அடவிநயினாா் கோவில் அணை- 50 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com