ஈரோடு: மக்களின் பிரச்னைகளுக்கு முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளது என ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்தார்.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க கழக அமைப்புத் தேர்தலுக்கான வேட்பு மனு வாங்கும் நிகழ்ச்சி ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு கழக அமைப்பு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈரோடு கட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் தொண்டர்களிடையே வேட்புமனுவை பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது: அதிமுக உள்கட்சி தேர்தலி்ல் போட்டியிட தொண்டர்கள் எழுச்சியுடன் வேட்புமனுவை வழங்கி வருவதாகவும், இதை பார்க்கும் போது எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றார்.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் தான் தற்போதைய திமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த வேலுமணி, மக்களின் பிரச்சனைகளுக்கு முன்நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளது என்றார்.