
அரூர்: தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்டம், அரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
திருநெல்வேலி மாநாகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறையின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
காலையில் வீடுகளில் இருந்து மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள், மாலையில் சடலமாக வீடு திரும்புவது என்பது மிகவும் வேதனையான நிகழ்வாகும். இதுபோன்ற விபத்தில் இறந்த கடைசி மாணவர்களாக இந்த மாணவர்கள் மூவரும் இருக்கட்டும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறமால் இருக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கட்டடங்களின் உறுதித் தன்மைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, தமிழக அரசு சார்பில் குழு அமைத்து போர்கால அடிப்படையில் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.