பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் பிறப்பித்து காவல்துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா் பாபுராஜ் மற்றும் பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஒரு வாரமாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறை தேடி வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக காவல்துறை அனுப்பியுள்ளது.