மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி சென்னைப் பெண் பலி: சிகிச்சையில் மற்றொரு பெண்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடலில் சனிக்கிழமை குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாதவரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியின் மனைவி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.  
உயிரிழந்த திவ்யா
உயிரிழந்த திவ்யா
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடலில் சனிக்கிழமை குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாதவரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியின் மனைவி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.  மற்றொரு பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர், கமல்(31) கட்டட சென்ட்ரிங் வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி திவ்யா(22), அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 வயதில் நிதீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. சனிக்கிழமை திவ்யா தான் வேலை செய்யும் கம்பெனியில் தன்னுடன் பணியாற்றும் சக தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். 

திவ்யாவின் உடலை மீட்டு வர ஒரு படகில் மீனவர்களுடன் ரப்பர் டியூப் உதவியுடன் கடலில் நீந்தி செல்லும் தீயணைப்பு துறையினர்.

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளித்த அவர்கள் இறுதியாக கடற்கரைக்கு வந்தனர். இதில் திவ்யா, தனது தோழி ஜானகி உள்ளிட்ட உடன் வந்த பெண்கள் சிலருடன் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். 

அப்போது ராட்சத அலையில் சிக்கி திவ்யா, ஜானகி இருவரும் தத்தளித்தனர். எங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டனர். அப்போது அப்பெண்களின் கூச்சலை கேட்டதும் உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரை கரையில் இருந்து கண்ட அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி நீந்தி சென்று ஜானகியை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து கடற்கரையிலேயே மூச்சு திணறி மயங்கி கிடந்த ஜானகிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு மேல் கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உயிருக்கு போராடிய பெண்களை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வருகின்றனர்.

பிறகு கடலில் ராட்சத அலையால் அடித்து செல்லப்பட்ட திவ்யாவின் உடல் பலமணி நேரம் ஆகியும் கரை ஒதுங்காததால் கரையில் இருந்த உடன் வந்த தோழிகள்; சிலர் மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் விரைந்து மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் திவ்யாவின் உடலை மீட்டு வர ஒரு படகில் மீனவர்களுடன் ரப்பர் டியூப் உதவியுடன் கடலில் நீந்தி சென்று திவ்யாவின் உடலை தேடினர். 1 மணி தேடுதலுக்கு பிறகு கரையில் இருந்து 2 மைல் தூரத்தில் மிதந்து கொண்டிருந்த திவ்யாவின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு திவ்யா உடலை பார்த்து உடன் வந்த தோழிகள் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. 

பிறகு மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார்,  தீயணைப்பு வீரர்களால் மீட்டு வரப்பட்ட திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திவ்யா இறந்த சம்பவத்தால் மாமல்லபுரம் கடற்கரை பகுதி சனிக்கிழமை சோகமயமாக காட்சி அளித்ததை காண முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com